வடக்கில் காணி அபகரிப்பு தாராளமாக இடம்பெறுகிறது-முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்



பாறுக் ஷிஹான்
வடக்கில் குறி்ப்பாக முல்லைத்தீவு – வவுனியா மாவட்டங்களில் அரசால் காணி அபகரிப்புக்கள்
மிக வேகமாக நடைபெற்று வருகின்றது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

வடக்கு மாகாண சபையின் முதலாவது சபையின் 120 ஆவது அமர்வு இன்று(5) நடைபெற்றது. அதில் காணிகள் தொடர்பில் சிறப்புரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.அவர் தெரிவித்ததாவது,

1979 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மாகாவலி அதிகார சபைச் சட்டம் எதனையும் கணக்கில் எடுக்காது தான்தோன்றித் தனமாக தனது வேலைகளைச் செய்து கொண்டு போகின்றது.

காணிகளைக் கைவசம் வைத்திருப்பது மட்டுமன்றி பயனாளிகளுக்குக் கைமாற்றவும் அது உரித்து கொண்டிருக்கின்றது. இவ்வாறான குடியேற்றங்களும் காணிக் கைமாற்றங்களும் எந்த அளவுக்கு சட்டப்படி வலிதுடையதாவன என்பது இன்னமும் நீதிமன்றங்களினால் தீர்மானிக்கப்படவில்லை.

கரைத்துறைப்பற்றின் காணிகள் யாவும் மகாவலியால் விழுங்கப்பட்டு வருகின்றது. ஏற்கனவே மணலாறு வெலிஓயா ஆகிவிட்டது. ஒருமித்த எங்களின் நடவடிக்கைகளால்த்தான் ஓரளவிற்கு இதனைத் தடுத்து நிறுத்தலாம்.

அமைச்சர் மங்கள சமரவீரவை சந்தித்த போது மகாவலி அதிகார சபைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்று கோரியிருந்தேன். அவர் அதுபற்றி பரிசீலிப்பதாக உத்தரவாதம் அளித்தார். ஆனால் அது அவ்வளவு சுலபமன்று. புதியதொரு சட்டத்தை மாகாண சபைகளுக்கு அளிக்கப்பட்ட பதின்மூன்றாம் திருத்தச்சட்ட ஏற்பாடுகளுக்கு அமைவாகத் தயாரித்து ஏற்ற பின்னரே மகாவலி அதிகார சபைச் சட்டத்தில் கைவைக்க முடியும். அதற்கிடையில் முல்லைத்தீவை முற்றிலும் தன்வசம் கொண்டு வந்துவிடும் மகாவலி அதிகார சபை. இது தான் யதார்த்தம் என்றார்
வடக்கில் காணி அபகரிப்பு தாராளமாக இடம்பெறுகிறது-முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வடக்கில் காணி அபகரிப்பு தாராளமாக இடம்பெறுகிறது-முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் Reviewed by nafees on 10:11 Rating: 5

No comments:

Powered by Blogger.