கண்டி வன்முறைகளின்போது முன்னெடுத்த பாதுகாப்பு ஏற்பாடுகளில் திருப்தியில்லை குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும்: ஐரோப்பிய ஒன்றியம்.

கண்டியில் ஏற்பட்ட வன்முறைகளின்போது பாதுகாப்புத் தரப்பினர் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த
உடனடியாக மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பில் எங்களால் திருப்தியடைய முடியாதிருக்கின்றது. இந்தப் பிரச்சினையை தடுத்து நிறுத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுத்திருக்கலாம் என்றே நாம் கருதுகின்றோம் என்று இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் பாராளுமன்றத் தூதுக்குழு தெரிவித்திருக்கின்றது.
எவ்வாறெனினும் இந்த சம்பவங்களுடன் தொடர்புபட்ட குற்றவாளிகள் சட்டத்தின் முன் கொண்டுவரப்பட்டு தண்டிக்கப்படவேண்டும். குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்காத கலாசாரம் முடிவுக்குக் கொண்டுவரப்படவேண்டும். அதேபோன்று பயங்கரவாத தடைச்சட்டத்தை விரைவாக நீக்கி அதற்குப் பதிலாக சர்வதேச தரங்களுக்கு அமைவான சட்டத்தை கொண்டுவரவேண்டும். இதில் தாமதம் மேற்கொள்ளாமல் விரைவாக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பாராளுமன்றக் குழு சுட்டிக்காட்டியது.
ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையை பெற்றுக்கொண்டுள்ள இலங்கை தற்போதைய நிலைமையில் சில முன்னேற்றங்களை வெளிப்படுத்தியுள்ளது. மேலும் சர்வதேச மனித உரிமை சாசனங்களை வெளிப்படுத்தி முன்னேற்றத்தை வெளிப்படுத்த வேண்டும். நிலுவையிலுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தற்போதைய சந்தப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியது.
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் சர்வதேச வர்த்தகம் தொடர்பான பாராளுமன்ற தூதுக்குழுவின் உறுப்பினர்கள் நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இந்த விடயங்களை சுட்டிக்காட்டினர்.
அதன்படி ஐரோப்பிய ஒன்றியத்தின் தெற்காசியாவிற்கான நிலையியல் அறிக்கையாளர் சஜாத் கரீம் மற்றும் இந்தத் தூதுக்குழுவின் தலைவர் ஜேன் சகராட்டில் ஆகியோர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,
இலங்கை ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை ஏற்கனவே பெற்றுக்கொண்டுள்ளது. இது இலங்கைக்கு பாரிய நன்மைகளை கொடுக்கின்றது. நாம் இலங்கைக்கு உதவி செய்யவே எதிர்பார்க்கின்றோம். ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை விவகாரத்தை மதிப்பீடு செய்யவோ, மீளாய்வு செய்யவோ எமது தூதுக்குழு இலங்கைக்கு வரவில்லை.
மாறாக இலங்கைக்கு உதவி செய்யவும் இலங்கையுடனான தொடர்புகளை வலுப்படுத்தவுமே வந்திருக்கின்றோம். இலங்கையில் குறிப்பாக பாதுகாப்பு, நீதித்துறை என்பன முக்கியத்துவமிக்கதாக பார்க்கப்படவுள்ளன. ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட சர்வதேச முதலீட்டாளர்களுக்கு இவை முக்கியத்துவமிக்கதாக உள்ளன. ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை என்னும் போது சர்வதேச சாசனங்களை இலங்கை அமுல்படுத்துவதில் எவ்வாறு அர்ப்பணிப்புகளை காட்டுகின்றது என்பதை பார்க்கின்றோம்.
அதேபோன்று நாங்கள் இலங்கைக்கு எவ்விதமான அழுத்தங்களையும் பிரயோகிக்கவில்லை. நாங்கள் இலங்கை வந்தவுடன் அழுத்தம் பிரயோகிக்க வந்துவிட்டதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. ஆனால் நாங்கள் இலங்கையுடனான தொடர்புகளை வலுப்படுத்தவே வந்திருக்கின்றோம். இலங்கை அரசாங்கம் சர்வதேச தரங்களை பின்பற்றவேண்டும். அது இலங்கைக்கும் அதன் மக்களுக்குமே முக்கியமானவையாகும். குறிப்பாக பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி சர்வதேச தரங்களுக்கு அமைவாக மாற்றுத்தரங்களை கொண்டுவரவேண்டும்.
இலங்கை சர்வதேச தரங்களை ஏற்கிறதா இல்லையா என்பதை இலங்கையே தீர்மானிக்கவேண்டும். நாம் பலமான இலங்கையைப் பார்க்கவிரும்புகின்றோம். கண்டி அசம்பாவிதம் தொடர்பாக நாம் அவதானம் செலுத்தினோம். இந்த வன்முறைகள் இடம்பெற்றபோது உடனடியாக மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பில் எம்மிடம் அதிருப்தி இருக்கிறது.
எது எப்படியிருப்பினும் இவற்றுடன் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும். குற்றவாளிகளை தண்டிக்காத கலாசாரம் முடிவுக்குக் கொண்டுவரப்படவேண்டும். சிறுபான்மை மக்கள் தாம் பாதுகாப்புடன் இருக்கின்றோம் என்பதை உணரும் வகையில் அரசாங்கம் செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டும்.
ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையை இலங்கை இழக்கக்கூடாது என்றே நாம் விரும்புகின்றோம். அதனை இலங்கை இழக்காமல் இருப்பதற்கு நாம் உதவி செய்ய தயாராக உள்ளோம். தற்போது பல முன்னேற்றங்கள் இலங்கையில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் இன்னும் பல முன்னேற்றங்கள் ஏற்படுத்தப்படவேண்டும் என்பதே எமது வலியுறுத்தலாகும்.
அரசாங்கம் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என நம்புகின்றோம். ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகைதொடர்பில் மீளாய்வு இடம்பெறுகின்றது. ஆனால் நாம் அதனை செய்வதற்காக வரவில்லை. நாம் அழுத்தம் பிரயோகிக்க வரவில்லை. அரசாங்கம் சந்தர்ப்பத்தை தவறவிடாமல் முன்னேற்றத்தை ஏற்படுத்தவேண்டுமென வலியுறுத்துகின்றோம் என்று தெரிவித்தார்.
கண்டி வன்முறைகளின்போது முன்னெடுத்த பாதுகாப்பு ஏற்பாடுகளில் திருப்தியில்லை குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும்: ஐரோப்பிய ஒன்றியம்.
Reviewed by nafees
on
01:21
Rating:
Reviewed by nafees
on
01:21
Rating:
No comments: